Saturday, 25 July 2015

அம்மை நோய்கள்...பதினான்கு வகை ...

அன்புடையீர்,
 அனைவருக்கும் இனிய வணக்கம். அம்மை நோய் பற்றி அறிந்துகொள்வோம்.
 
அம்மை நோய் :
        அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 
 2. பாலம்மை
3. மிளகம்மை 
 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 
 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை
  8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 
 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 
 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 
 14. தவளை அம்மை 
என்பனவாகும். 
        இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

No comments:

Post a Comment